Saturday 31 October 2015

எண்ணெய் தேய்த்து குளி - OIL BATH



Deepawalikku9


Deepawalikku1

எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.
எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?
“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.
எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
என்ன எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்?
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னெல்லாம் செய்யக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்க வேண்டும்? போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.
எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
நதியா நடித்த பூவே பூச்சூடவா திரைப்படத்தில் “தீவளிக்கு தீவளி…. எண்ண தேச்சி நீ குளி… பாட்டி சொன்ன வைத்தியம்… கேட்டு வந்தேன் பைங்கிளி…” என ஒரு பாடல் வரும்.
நிச்சயமாக அந்த பாட்டி ஒரு மக்கு பாட்டியாகத்தான் இருக்கவேண்டும்.
நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
Deepawalikku7

ஆனால் ஏதாவது பண்டிகை வந்தால்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஞாபகம் வரும். எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒன்றும் சடங்கல்ல. அது ஒரு ஆரோக்கிய செயல்முறை. என்றாவது ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது அனேக கலோரிகள் சக்தி வீணாகும். எனவே எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடல் மிகவும் சோர்வடையும். பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கவேண்டிய தேவையில் சோர்வுறுவது நல்லதா?
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வரும் பலன்கள் :
-          உடல் சூடு குறையும் (நம் நாடு வெப்பமண்டல பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்கமுடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம் ).
-          உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.
-          தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
-          தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
-          தோல் மென்மையாகும்.
-          தோல் சுருக்கம் ஏற்படாது, எனவே முதுமை தோற்றம் தள்ளிப்போகும்.
-          தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.
-          தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
-          கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும்
-          கண் பார்வை பாதுகாக்கப்படும்.
-          தலைமுடி நன்கு வளரும்.
-          உடல் வறட்சி மாறும்
-          தலைக்கு பலம் உண்டாகும்
-          முழங்கால் மூட்டுகள் பலமடையும்
-          குரல் வளம் பாதுகாக்கப்படும்
-          உடல் அசதி தீரும்
-          தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும்.
-          நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
-          நரம்பு மண்டலம் பலப்படும்
-        குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
என்ன எண்ணெயை பயன்படுத்த வேண்டும்?
எண்ணெய் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?
Deepawalikku21. எண்ணெய் என்ற சொல்லின் பொருளே எள்+நெய் என்பதுதான். நெய்ப்புத்தன்மை உள்ள பொருளையே நெய் என்கிறோம். எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய். திலம் என்ற வார்த்தைக்கு எள் என்று பொருள். எனவே திலத்திலிருந்து எடுப்பதால் தைலம் என்று பெயர் வந்தது. பொதுவாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நல்லெண்ணெயே பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் எல்லா காலங்களுக்கும் ஏற்றது.
Deepawalikku5

2. பசு நெய்யையும் தேய்த்துக் குளிக்கலாம். (சித்த மருத்துவ அறிவியலை கூறுகிறேன். உண்பதற்கே நெய் வாங்க வழியில்லாதவர்கள் உள்ள நாட்டில் இதற்கு மனசாட்சி எப்படி இடம் தருமோ)
Deepawalikku8பசு நெய் தேய்த்து குளிப்பாட்டுவது குழந்தைகளுக்கு நல்லது. மேலும் இரத்த கொதிப்பு, மூளை சம்பத்தப்பட்ட நோய்கள், அதிக தாகம் போன்ற பிரச்சனைகள் உள்ள வயதானவர்களுக்கு நெய் தேய்த்து குளிப்பது நல்லது.
Deepawalikku12

3. வெப்பமான காலங்களில் பசு நெய் ஒரு பங்கு மட்டும் எடுத்து அந்த அளவுக்கு இன்னொரு பங்கு விளக்கெண்ணெயும் இன்னொரு பங்கு நல்லெண்ணையும் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து பயன்படுத்தலாம். பசுவின் நெய் தேய்த்து குளிக்கும்போது பச்சைப்பயறு பொடி தேய்த்துக் குளிக்கலாம்.

Deepawalikku4

எண்ணெயை நன்றாக உச்சி முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும். ஆனால் சூடு பறக்க தேய்க்கக் கூடாது.
தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்கவேண்டும்.
“ எண்ணெய்ப்பெறின் வெந்நீரிற்குளிப்போம்……” என்றதால் எண்ணெய் தேய்த்து குளித்தபின் வெந்நீரில்தான் குளிக்கவேண்டும்.
Deepawalikku6வெந்நீர் போடும்போது அதில் சில மாவிலைகளை போட்டு கொதிக்க வைத்து அந்த வெந்நீரை பயன்படுத்துவது நல்லது.
தேய்த்து குளிக்க அரைப்பு :
நெல்லிக்காய் பருப்பு – 1 ¼ பங்கு
வெண்மிளகு       – 1 பங்கு
கஸ்தூரி மஞ்சள்   – ¾ பங்கு
கடுக்காய் தோல்     – ½ பங்கு
வேப்பம் விதை       – ¼ பங்கு
இவைகளை பொடித்து தூளாக்கி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். (எல்லாவற்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்யவும்). அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்கள் உடலுக்கு தகுந்த குளியல் பொடிகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
புண் உள்ளவர்கள், தோல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அதே போல நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களும் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ?
Deepawalikku10

பதார்த்த குண சிந்தாமனி என்னும் புத்தகம் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டிய நேரத்தை இவ்வாறு விளக்குகிறது.
“அயமா னிவைக்கம் பதத்துளி யாழ்குளிர்க் கட்டமத்துள்
வயமா கனிக்குங்கோல் தேட்குநந் நான்குவின் மானிரண்டே
பயமார் கடமார்ச்சத் திற்குந் திரிக்குட் பகர்திங்களி
னயமாந்த தயிலங்க ளாடவ ரோகமெய் நண்ணுவரே”
அதாவது
- சித்திரை, வைகாசி மாதங்களில் (ஏப்ரல் பாதியிலிருந்து ஜூன் பாதி வரை) காலை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்.
- ஆனி, ஆடி மாதங்களில் (ஜூன் பாதியிலிருந்து ஆகஸ்ட் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து மூன்றேகால் மணி நேரத்திற்குள்.
- ஆவணி, புரட்டாசி, அய்ப்பசி, கார்த்திகை மாதங்களில் (ஆகஸ்ட் பாதியிலிருந்து டிசம்பர் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணிக்குள்.
- மார்களி, தை மாதங்களில் ( டிசம்பர் பாதியிலிருந்து பிப்ரவரி பாதி வரை) ஒரு மணி நேரத்திற்குள்.
- மாசி, பங்குனி மாதங்களில் ( பிப்ரவரி பாதியிலிருந்து ஏப்ரல் பாதி வரை) ஒன்றேகால் மணி நேரத்திற்குள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது
- சித்த மருத்துவத்தில் நோய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிப்போம்.
வாத நோய்கள்
பித்த நோய்கள்
கப நோய்கள்
இதில் கப நோயாளிகள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
-          செரியாமை (அஜீரணம்) உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
மேலும் சில சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது (தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்)
எண்ணெய் தேய்த்து குளித்தபின் செய்யக்கூடாதவை
-          கடுமையான வேலைகள் செய்யக்கூடாது.
-          வெய்யிலில் சுற்றக்கூடாது.
-          உடலுறவு கூடாது.
-          பகலில் உறங்கக்கூடாது
-          அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் இருக்கக்கூடாது.
எண்ணெய் தேய்த்து குளித்தபின் இவைகளை செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும்.
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
-          கீரைத்தண்டு
-          அறு கீரை
-          மாவுப்பொருளால் ஆன உணவுப்பண்டங்கள்
-          வெல்லம்
-          பூசணிக்காய்
-          மாங்காய்
-          தேங்காய்
-          அகத்திக்கீரை
-          கசப்பான சுவையுள்ள பொருட்கள்
-          பழங்கள்
-          இளநீர்
-          சேம்பு, கத்தரிக்காய் , கொத்தவரை, மொச்சை,
-          நண்டு, மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி , பன்றிக்கறி
-          எள், கொள்ளு, உளுந்து, கடலை
-          பால், தயிர், குளிர்ந்த பானங்கள்
-          வெங்காயம்
இவைகளை எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் தவிர்ப்பது நல்லது.
  
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
- எண்ணெய் தேய்த்து குளித்தபின் மீன், மட்டன், சிக்கன் சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் எண்ணெய் தேய்த்து குளிப்பதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன்,
ஏரி மீன் சாப்பிடலாம், அயிரைமீன் , சுறா சாப்பிடலாம்.
- காடை, கவுதாரி, முயல் சாப்பிடலாம் (வழக்கொழிந்து போன இந்த உணவுகள் இப்போது மட்டன் சிக்கன் கடைகளில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது)
- தயிர் , பால் சாப்பிடக்கூடாது ஆனால் நெய் சாப்பிடலாம்.
- கீரைகளில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை கறிவேப்பிலை சாப்பிடலாம்.
- மோர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு மண் சட்டியில் உப்பை போட்டு வறுத்து உப்பை எடுத்துவிட்டு அந்த சூடான சட்டியில் மோரை ஊற்றி முறித்து அந்த மோரை பயன்படுத்தலாம்.
- காய்கறிகளை பொருத்தவரை இளம் பிஞ்சானதாக சமைத்து உண்ணவேண்டும்.
என்னென்ன நோயினர் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்கவேண்டும்?
Deepawalikku9ஒவ்வொரு நோய் நிலையிலும் தேய்த்துக்குளிப்பதற்கென்று அனேக தைலங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இதை கண்டிப்பாக சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்தவேண்டும். என்னென்ன நோய்களுக்கு, அதற்கான சிறப்பான தைலங்கள் உள்ளன என்பதை மட்டும் ஒரு சிறிய அறிமுகத்திற்காக சொல்கிறேன்.
-          சில கண் நோய்கள்
-          காது நோய்கள், மூக்கு நோய்கள், தொண்டை நோய்கள் (ENT)
-          பீனிச நோய்கள் (sinusitis)
-          இரத்தக்கொதிப்பு
-          சில தலை நோய்கள்
-          ஒற்றை தலைவலி
-          சில உடல் வலிகள்
-          சில வாத நோய்கள்
-          மூளை நோய்கள்
எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஒரு சடங்கு போல பண்டிகைக்கு மட்டும் செய்யாமல், அதை ஒரு ஆரோக்கிய முறையாக கடைபிடிக்கவேண்டும்.

CLINIC :
DR. JEROME XAVIER B.S.M.S., M.D
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI.
INDIA
MOBILE - 9444317293

2 comments:

  1. மிக அருமை ..பயனுள்ள நல்ல தகவல்கள் ...

    ReplyDelete