Wednesday 30 September 2015

சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?

Dr.Jeromeசித்த மருத்துவத்தைப் பற்றிய ஒரு முழுமையான, அடிப்படையான புரிதலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவையே இந்த தொடர் கட்டுரைகள். அந்த விதத்தில் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சையும் ஒரு துறைதான் என்பதை அறிமுகப்படுத்தவே இந்தக் கட்டுரை.
சித்த மருத்துவராகிய எனது பெயரின் பின்னால் இருக்கும் B.S.M.S என்று பட்டத்தின் விரிவாக்கம் எத்தனை பேருக்குத் தெரியுமோ? Bachelor of Siddha Medicine and Surgery அதாவது சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம்.
அப்படியானால் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?
இதற்கான பதிலை கடைசியில் கூறுகிறேன்.
அதற்கு முன் சில விசயங்களைப் பார்ப்போம். அறுவை சிகிச்சை என்றாலே அதற்கு நேர்த்தியான கருவிகள் வேண்டும்.
சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கருவிகளின் பெயர்களையும், அதன் வடிவங்களையும் சுருக்கமாகப் பார்ப்போமா?
‘அகத்தியர் நயன விதி’ என்ற புத்தகத்தில் மட்டும் கூறப்பட்ட 26 வகையான கருவிகளை ஒரு அறிமுகத்திற்காக குறிப்பிடுகிறேன்.
கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்
முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்
ஆழிக் கோலு மடுத்த பிறையுடன்
கத்திரிக் கையுடன் பரகரை வாங்கியும்
முச்சலா கையோடு முனிமொழி யோட்டும்
மட்டக் கோலும் மாறும் ஊசியும்
செப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும்
வட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும்
செப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும்
வெங்கலக் குழலும் ஈயச் சலாகையுங்
காயக் கோலுங் கண்கத்தி தண்டும்
இவையிவை யாயுத மிருபத் தாறும்
இதன் அளவுகளையும்,வடிவங்களையும் சுருக்கமாக பார்ப்போமா..
sidhdha - surgery6
  1. சுத்தி – 6 அங்குல நீளம்,அகலம் 1 அங்குலம்,முனைவட்டம் மயிர்க்கத்தியைப் போன்றது.
  2. சத்திரம் – 6 அங்குல நீளம்,வேப்பிலையைப் போல் பல்பல்லாயிருக்கும். நிறை 6 கழஞ்சு, பிளவை, கட்டியிவைகளைக் கண்டமாய் அறுக்க உபயோக்கபடுகிறது.
  3. குறும்பி வாங்கி – 7 அங்குலம், நிறை அரைக்கழஞ்சு, கைப்பிடி மட்டும் 5 அங்குலம்.
  4. முகவாதனன் – 12 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு
  5. முள்வாங்கி – 6 அங்குலம் நீளமுள்ளதாய் 1 அங்குலம் அகலமுள்ளதாய் 1 கழஞ்சு நிறையுள்ளதாயிருப்பது. இது அறுக்கவும், கீறவும், நகம் வாங்கவும் உபயோகப்படுவது.
  6. ஆழிக்கோல் – 10 அங்குலம், நிறை அரைப்பலம்.
  7. பிறைக்கோல் – 3 அங்குலம், நிறை 3 கழஞ்சு எழுத்தாணிபோல் நீண்ட பிறைக்கோல் மத்தியில் விளங்கும்.
  8. கத்தரிக்கோல் – 8 ½ அங்குலம், நிறை கால் பலம்
  9. பரகூரை வாங்கி – 16 அங்குலம், நிறை அரைப்பலம்.
  10. முச்சிலாகை – 7 அங்குலம், நிறை 4 கழஞ்சு, மூன்று தகட்டு வாயுள்ளது.
  11. முனிமொழி – இது ஒரு முக்கிய கருவியாகும்.
  12. ஒட்டுக்கோல் – 11 அங்குலம் தலை மட்டம், 1 கழஞ்சு, தலையொழிந்த பாகம் அரைப்பலம் நிறையுள்ளது.
  13. அட்டக்கோல் – 18 அங்குலம் நிறை 8 காசெடை
  14. ஊசி – 3 அங்குலம், நிறை அரைமா.
  15. செப்புக் குழை – ஒரு சாண் நீளம், நிறை அரைப்பலம், தகடு ஓலைக்கனம், திரட்சியான குழல், புண்ணில் விடுவது.
  16. சுலாகை – 4 அல்லது 5 அங்குலம், நிறை 12 கழஞ்சு, புரையோடிய புண்களின் நிலையை யறிதற்கு உபயோகப்படுவது.
  17. வட்டகை – ஓர் ஆயுதம்
  18. பஞ்சமுகம் – ஓர் ஆயுதம்
  19. செப்புச் சிலாகை – ஓர் ஆயுதம்
  20. கொம்பு – 10 அங்குலம் நீளம்,காளை மாட்டுக் கொம்பிற்கு அடிப்பாகத்தில் பித்தளையினால் ஆன பூண் போன்றது. அதாவது வாழையின் குருத்துபோன்ற பூண் இரண்டங்குலம். குருதி கட்டப்பட்டிருக்கும் சரீர வீக்கம், கட்டி இவைகளைக் கீறி இரத்தத்தைக் கொம்பு வைத்து வாயினால் உறிஞ்சி உமிழ்தல்.
  21. குடோரி – 7 ½ அங்குலம், நிறை கால் பலம்.
  22. வெண்கலக் குழல் – 8 அங்குல நீளம், நிறைய — பலம்.
  23. ஈயச்சலாகை – 3 அங்குல நீளம், நிறை 4 கழஞ்சு, வாதம், பிளவை, கிருமி இவற்றைக் குணப்படுத்துவது.
  24. காயக்கோல் – 7 அங்குல நீளம், பருமன் 2 அங்குலம், நிறை 2 கழஞ்சு
  25. தண்டுச் சலாகை – 9 அங்குலம், நிறை 1 ½ கழஞ்சு, ஈர்க்குக் கனம்.
  26. நயனக் கத்தி – 3 அங்குலம், நிறை இரு பணவெடை, ஊசி போன்ற முனையுள்ளது. (முனையில் புளியிலை கனம் விட்டு மற்ற பாகங்களெல்லாம் நூலால் சுற்றப்பட்டுள்ளது.)
இங்கு இன்னொரு முக்கியமான விசயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், இந்த கருவிகளையெல்லாம் நான் பார்த்தது கூட கிடையாது.
சரி இனி அடுத்த விசயத்திற்கு வருவோம்.
சித்த மருத்துவத்தில் மூன்று வகையான மருத்துவமுறைகள் உள்ளன.
sidhdha - surgery1
  1. மூலிகைகள், தாதுப்பொருள்கள், உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சாதாரணமான மருந்துகளால் சிகிச்சை செய்வது.
  2. சில உயர்தர மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்வது (Higher Level Medicines)
  3. அறுவை சிகிச்சை
இதில் அறுவை சிகிச்சையை அசுர சிகிச்சை என்ற பெயரில் செய்திருக்கின்றனர்.
sidhdha - surgery2அதாவது மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில நோய் நிலைகளை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்த நோய்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.
சரி, சித்த மருத்துவத்தில் எப்படி அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு வரலாம்.
  1. அறுவை
  2. அக்கினி
  3. காரம்
என்ற மூன்று முறைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். இந்த மூன்று முறைகளும் ஒரு அறுவை சிகிச்சையில் எப்படி பயன்படுத்தப்பட்டன என பார்ப்போம். முதலில் அறுவை, இதற்குத்தான் மேற்கூறிய கருவிகளை பயன்படுத்தினர்.
அறுவை சிகிச்சை செய்வதில் சிக்கலான விசயங்கள் மூன்று.
  1. அறுக்கும் போது ஏற்படும் வலி(pain)
  2. இரத்தப்போக்கு ((Bleeding)
  3. கிருமி தொற்று (Infection)
இந்த மூன்றையும் கையாண்டுவிட்டால் அறுவை சிகிச்சை செய்து விடலாம்.
  1. வலி:
sidhdha - surgery5இன்றைக்கு மயக்க மருந்து கொடுப்பதைப் போலவே நோயாளியை மயக்கமடையச் செய்ய அநேக மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊமத்தை விதை, கஞ்சா, அபினி போன்றவைகள் உதாரணத்திற்கு. இன்றைக்கும் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மிக வலிமையான வலி நிவாரணியான Morphine அபினி எனும் மூலிகையிலிருந்து தான் உருவாக்கப்பட்டது.
  1. இரத்தப்போக்கு:
sidhdha - surgery3இதனை தடுப்பதற்காகத்தான் அக்கினி என்ற முறையை பயன்படுத்தினர். அதாவது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இரத்தக்குழாய்களில் மேற்கூறிய கருவிகளை சூடாக்கி சுட்டிகை செய்து விடுவது (Cauterization) இன்றைக்கும் நவீன அறுவை சிகிச்சையில் இந்த உத்திகள் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  1. கிருமி தொற்று:
sidhdha - surgery4அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கிருமிகள் தொற்று ஏற்பட்டால் அதிகபட்சமாக உயிரிழப்பு கூட ஏற்படலாம். எனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கார மருந்துகளை வைக்கும் முறை இருந்தது. செய்யும் அறுவை சிகிச்சையைப் பொறுத்து காரமாகவோ, களிம்பாகவோ, பொடியாகவோ, நீர் வடிவிலோ, களி வடிவத்திலோ அல்லது பசை வடிவத்திலோ கார மருந்துகள் வைக்கப்பட்டன.
அறுவை சிகிச்சை முறைகளை விளக்கும் சில நூல்கள்:
தேரன் கரிசல்
தேரன் தரு
அகத்தியர் இரண வைத்தியம்
நாகமுனி நயன வைத்தியம்
சீவரட்சாமிர்தம்
யூகி சிந்தாமணி
என்னென்ன நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற விபரங்களும், யார் யாருக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்தால் உடல்நிலை ஒத்துக்கொள்ளாது என்ற குறிப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மிக மிக சுருக்கமாக ஒரு அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
சரி இப்போது மீண்டும் கேள்விக்கு வருவோம். சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?
மருத்துவத்தில் உள்ளது, மருத்துவமனையில் இல்லை.
ஏன் இல்லை என்ற கேள்விக்கான பதில் “சித்த மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன? நிலவிலா செவ்வாய் கிரகத்திலா?” என்ற எனது கட்டுரையைப் படித்தவர்களுக்குப் புரியும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?

aasthumaa1‘ஆஸ்துமா’ என்ற பெயர்தான் அனைவருக்கும் அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் இதற்கு சித்த மருத்துவத்தில் ‘இரைப்பு நோய்’ என்று பெயர்.
பொதுவாக இந்த நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். உங்கள் உறவினரோ நண்பரோ அல்லது நீங்களோ கூட அப்படிப்பட்டவராக இருக்கலாம். சிலர் இப்படி பல மருந்துகள் எடுத்துப் பார்த்து சலித்துப்போய் “இப்போதெல்லாம் நான் ஆஸ்துமாவுக்கு மருந்து எதுவும் எடுப்பதில்லை. மூச்சிரைப்பு வந்தால் Inhaler அடித்துக் கொள்கிறேன்” என்பதோடு முடித்துக்கொள்கிறார்கள்.
ஏன் இவர்களுக்கு இந்நோய் முற்றிலும் குணமாவதில்லை.
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
  1. சரியான மருத்துவமுறையை தேர்வு செய்யாதது. முழுமையான மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் நிவாரணம் மட்டும் எடுத்துக் கொள்வது.
  2. சரியான நோய் கணிப்பு செய்யாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது.
  3. போதுமான கால அளவு மருந்துகள் எடுத்துக் கொள்ளாதது.
இதை விரிவாக பார்ப்பதற்கு முன் இரைப்பு நோய் பற்றி சுருக்கமாக பார்ப்போமா.
நுரையீரல்- மூச்சு விடுவதற்கு காரணமான இந்த உறுப்பில் ஏற்படும் பிரச்சனை தான் இரைப்பு. ஒரு மரத்தின் வேர் போன்ற அமைப்பில் உள்ளதுதான் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்கள். ஒரு ஆணிவேர் எப்படி பிரிந்து பல பகுதிகளாக சென்று, அவை மீண்டும் பல பிரிவுகளாக, மீண்டும் பல பிரிவுகளாக செல்கிறதோ, அதைப்போலவே மூச்சுக்குழாயும் பிரிந்து பிரிந்து கடைசியில் மிகச்சிறிய மூச்சுக் குழாய்களாக பிரிகின்றன. இந்த மூச்சுக் காற்றின் பாதையில் ஏற்படும் தடையினால் இரைப்பு ஏற்படுகிறது.  அந்த தடைகள் ஏன் ஏற்படுகின்றன?
நுரையீரல் என்பது உடலுக்குள்ளே இருக்கின்ற ஒரு உறுப்பாக தோன்றினாலும் கிட்டத்தட்ட அது உடலுக்கு வெளியே இருக்கின்ற தோல் போல புறச்சூழ்நிலையுடன் நேரடியாக தொடர்புடையது. எனவே புறச்சூழ்நிலையில் உள்ள மாசுக்கள் நுரையீரலின் உள்ளே மூச்சுக் காற்றின் வழியாகச் சென்று மூச்சுக் குழாயின் மென் தசைகளில் ஒரு வித வீக்கம்( Inflammation) உண்டாக்குகின்றன. எனவே மூச்சுக்குழாய் சுருங்குகிறது. இதனால் மூச்சை உள்ளே இழுக்கவும், வெளியே விடவும் முடியாமல் போகிறது, மாசுக்கள் இப்படி பாதிப்பை ஏற்படுத்துவதைப் போலவே குளிர் காற்றும் மூச்சுக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலே கூறிய காரணங்கள் புறச்சூழ்நிலையில் வருபவை.
அதேபோல நாம் உண்ணும் உணவினாலும் இரைப்பு வரலாம். சிலருக்கு எளிதில் சீரணிக்காத உணவுகள், கிழங்குகள் போன்றவற்றை உண்பதால் இரைப்பு வரும். புறச்சூழ்நிலையோ அல்லது உணவோ அவை உடலில் கபம் மற்றும் வாதத்தின் செயல்பாடுகளை இயல்பு நிலையிலிருந்து மாற்றி இரைப்பு நோயை உண்டாக்குகின்றன.
aasthumaa2
இரைப்பு நோயின் வகைகள்:
வாத இரைப்பு
கப இரைப்பு
கப வாத இரைப்பு
முக்குற்ற இரைப்பு
மேல்நோக்கு இரைப்பு
என ஐந்து வகைகளாக இரைப்பு நோய் உள்ளது. இவை அனைத்திலும் குறிகுணம் ஒன்றாக இருப்பது போல தோன்றினாலும் இவை உண்டாகும் காரணங்களும் இவற்றின் மருத்துவமும் முற்றிலும் மாறுபடும்.
வாத இரைப்பு:
ஆஸ்துமா என்றாலே மழை, குளிர், சளி போன்றவைகள்தான் உண்டாகிறது என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த வகை இரைப்பு வெய்யிலில் அதிகம் அலைவதால் வரும். எளிதில் சீரணமாகாத உணவை உண்பதால் வரும் கிழங்குகள் போன்றவற்றை உண்பதால் தூண்டப்படும் இந்த செயல்களால் வாதம் தூண்டப்பட்டு உருவாகின்ற இரைப்பு இது.
கப இரைப்பு:
இதுதான் மழைக்காலம், குளிர்ந்த காற்று போன்ற குளிர்ச்சியான சூழ்நிலையில் உண்டாவது. இதில் கபம் தூண்டப்பட்டு இந்நோயை உண்டாக்குகிறது.
கப வாத இரைப்பு:
இதில் கபமும் வாதமும் தூண்டப்பட்டு இரைப்பு உண்டாகும். இந்த நோயாளிகளுக்கு மலக்கட்டு உண்டாகும். வயிறு உப்பி போகும். இவர்களுக்கு இரைப்பு வரும்போது மயக்கம் வரலாம்.
முக்குற்ற இரைப்பு:
முக்குற்றம் என்றால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் தூண்டப்பட்டு உண்டாவது.
உடலில் 10 வகையான வாயுக்களின் இயக்கங்கள் உள்ளன. அவற்றில் சுவாசத்தோடு தொடர்புடைய சில வாயுக்களின் இயக்கம் தடைபடுவதால் இந்த இரைப்பு உண்டாகிறது,
மேல்நோக்கு இரைப்பு:
மேல் கூறிய முக்குற்றங்களின் செயல்பாடுகளையும் தாண்டி உறுப்பை சார்ந்தது இந்த இரைப்பு.
சரி மீண்டும் கட்டுரையின் மையப் பொருளுக்கு வருவோம்.
ஆஸ்துமா குணமாகாமல் இருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
aasthumaa6காரணம் 1:
சரியான மருத்துவ முறையை தேர்வு செய்யாதது.
பலவிதமான மருத்துவமுறைகள் உள்ளன. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவ முறை சிறப்பானதாக இருக்கும். சில நோய்களுக்கு சில மருத்துவ முறைகளில் தீர்வு இல்லாமல்கூட இருக்கும். உதாரணமாக சிறுநீரகக் கல்லை எடுத்துக் கொண்டால் அதற்கு அலோபதி மருத்துவ முறையில் உள் மருந்துகள் கிடையாது. வெளியிலிருந்து கதிர்வீச்சு மூலமாகவே கற்களை உடைக்க முடியும் அல்லது அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும். ஆனால் சித்த மருத்துவத்தில் உள் மருந்துகள் மூலமாகவே கற்களை கரைக்க முடியும். இப்படி ஒரு சில நோய்களுக்கு ஒரு சில மருத்துவமுறையே சிறந்தது.
ஆஸ்துமாவை பொருத்தவரையில் சித்த மருத்துவமே முழுமையான குணத்தைத் தரமுடியும்.
மூச்சுக்குழாயில் ஏற்படும் சளிச்சுரப்பை நிறுத்துவதற்கு ஒரு மருந்து, மூச்சுக்குழாய் அழற்சியை நிறுத்த ஒரு மருந்து, சளியை கரைக்க ஒரு மருந்து மூச்சுக் குழாயை விரிவடையச் செய்ய ஒரு மருந்து என கொடுப்பது சிகிச்சை அல்ல அது வெறும் நிவாரணம்தான். இதனால் அந்த நேரத்திற்கு மூச்சிரைப்பு மாறும் ஆனால் முழுமையான விடுதலை கிடைக்காது. மீண்டும் மீண்டும் இந்தக் கதை தொடரும்.
காரணம்:2
சரியான நோய் கணிப்பு இல்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது,
ஆஸ்துமா என்றாலே அது ‘மூச்சு வாங்குவது’ என்ற ஒற்றை புள்ளியில் அனைவருக்கும் ஒரே மாதிரியாக சிகிச்சை செய்வது அனைவரையும் குணப்படுத்தாது.
நான் மேலே குறிப்பிட்டதைப் போல நோய் வருவதற்கான அடிப்படைக் காரணம் (வாதமா, கபமா) என்பதை கவனித்து, அதிகரித்த குற்றத்தை முதலில் சரிசெய்ய வேண்டும்.
நோயாளியின் நாடி நிலையை அறிந்து கபம் காரணமானால் ‘நசியம்’ எனும் சிகிச்சையும், வாதம் அதிகமானால் ‘பேதிக்கும்(Purgation) மருந்து கொடுத்து அதனுடன் மருத்துவம் செய்ய வேண்டும். இந்த கணிப்பில் ஏற்படும் தவறுதான் வாழ்நாள் முழுவதும் ஆஸ்துமா தொடர்வதற்குக் காரணம்.
காரணம் 3:
aasthumaa5போதுமான கால அளவு மருந்துகள் எடுத்துக் கொள்ளாதது.
பொதுவாக ஆஸ்துமா வந்தவுடன் ஒரு மருத்துவரைப் பார்ப்பர். அவர் ஒரு வாரத்திற்கோ இரண்டு வாரங்களுக்கோ மருந்து கொடுப்பார். அதை சாப்பிட்டதும் இரைப்பு நீங்கிவிடும். எனவே அதோடு சிகிச்சையை முடித்துக் கொள்வர். பிறகு சில வாரங்களோ மாதங்களோ கழித்து மீண்டும இரைப்பு வரும்போது மீண்டும் இதே கதை தொடரும்.
சித்த மருத்துவத்தில் ஆஸ்துமாவை பொறுத்த வரையில் மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இது நோயாளியின் நோய் கணிப்பை பொறுத்து மாறுபடும். சித்த மருத்துவத்தில் குறிகுணங்களுக்கு மட்டும் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. நுரையீரல் தசைகளையும், மூச்சுக் குழாய்களையும் வலிமைப்படுத்துவதற்கும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஒரு வருடம் மருந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதிலிருந்தே இந்த நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், மண்டூரம் போன்ற உலோகங்களும் பவளம், முத்து, முத்துச்சிற்பி போன்ற மருந்துச் சரக்குகளும் சேர்த்த மருந்துகள் நுரையீரலை வலிமைப்படுத்த கொடுக்கப்படுகின்றன. ஒரு வருடம் முறையான, முழுமையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் இந்நோயினால் அவதிப்பட வேண்டிய தேவையில்லை. முழுமையான விடுதலை அடையலாம்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கான மூச்சுப்பயிற்சி:
பிரணாயாமம்:
aasthumaa3ஒரு குறிப்பிட்ட முறையில் செய்யும் இந்த மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் வலிமை பெறும். வாத இரைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக பிரணாயாமம் செய்ய வேண்டும். கப வாத இரைப்பு உள்ளவர்கள் பிரணாயாமம் செய்து வந்தால் மயக்கம் வருவதை தவிர்க்கலாம்.
யோகாசனங்கள்:
aasthumaa7இரைப்பு நோயாளிகளுக்கு புஜங்காசனம் மிகவும் நல்லது. மேலும் விபரீதகரணி முத்ரா, மச்சாசனம், வில் ஆசனம், ஒட்டக ஆசனம், அர்த்த சிரசாசனம், சவாசனம் போன்றவைகளும் நல்லது.
இரைப்பு நோயாளிகள் இரவில் படுக்கப் போகும் முன் இந்த ஆசனங்களை செய்வது நல்லது.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்

Irudhayam5தமிழில் ‘இரத்தம்’ என்ற வார்த்தை ‘இருத்தம்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும், ‘அயம்’ என்ற சொல்லுக்கு ‘கருவி’ என்ற பொருள் உள்ளதாகவும், இருத்தத்தை இயக்குகின்ற கருவி என்பதால் ‘இருத்தயம்’ → இருதயம் என அழைக்கப்படுவதாகவும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இது சரி என எனக்குத் தெரியாது. தமிழில் மீது உள்ள ஆர்வத்தால் இதை பதிவு செய்தேன்.
சரி, இனி விசயத்திற்கு வருவோம். சித்த மருத்துவத்தில் இருதய பாதுகாப்பு என்பதை பற்றிய கட்டுரை இது.
முதலில் இதயத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம். இதில் நான்கு அறைகள் உள்ளன. வலது மேல் அறை உடல் முழுவதும் இருந்து வரும் பிராண வாயு இல்லாத இரத்தத்தை உறிஞ்சி, வலது கீழ் அறைக்கு தள்ளிவிடுகிறது. வலது கீழ் அறை அந்த இரத்தத்தை நுரையீரலுக்குள் தள்ளி விடுகிறது. நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு அந்த இரத்தத்துடன் கலந்து, நல்ல இரத்தமாக மீண்டும் இதயத்தின் இடது மேல் அறைக்கு உறிஞ்சப்படுகிறது. பின் அங்கிருந்து இடது கீழ் அறைக்குத் தள்ளப்படுகிறது. பின் இங்கிருந்து இரத்தக்குழாய்கள் மூலமாக உடல் முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வழியில் கதவுகள் போல செயல்படுவையே இதய வால்வுகள்.
சொல்லப்போனால் இருதயம் என்பது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகவும் சாதாரணமான ஒரு உறுப்பு. சிக்கல் இல்லாத தெளிவான ஒரு உறுப்பு. ஆனால் திடீரென உயிரை பறித்துவிடக்கூடிய மாரடைப்பு எனும் பிரச்சனையால் அது மிகவும் பயத்துடன் பார்க்கப்படுகிறது. இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளை விட வித்தியாசமானவை. இதயத்தின் தசைகளில் உள்ள செல்களுக்கென்று (Myocytes) தனியே ஒரு சில பண்புகள் உள்ளன.
பொதுவாக இதயத்தின் தசைகள், இதழ்கள்(Valves), இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் இடத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் போன்றவற்றில்தான் பிரச்சனைகள் உருவாகின்றன. இருதயத்தைச் சுற்றியுள்ள உறையிலும் (Pericardium) பிரச்சனைகள் உருவாகலாம்.
இருதயத்தில் ஏன் பிரச்சனைகள் உண்டாகின்றன?
Irudhayam7கரு உற்பத்தியிலேயே உண்டாகும் மாற்றங்களால், பிறவியில் இருதய குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது.
உடலில் இயங்கும் பத்து வித வாயுக்களின் இயக்கங்களில் (பிரானன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தனஞ்சயன், தேவ தத்தன்) மேல்நோக்கு வாயுவான உதானன் மற்றும் பரவு வாயுவான வியானன் ஆகியவற்றின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இந்த மாற்றங்களுக்குக் காரணம் நம்முடைய உணவு மற்றும் செயல்களே.
இருதய பாதுகாப்பு இயலாத காரியமா?
பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர, மற்றபடி இயல்பான நிலையில் இருக்கும் அனைவருக்கும் இருதய பாதுகாப்பு என்பது மிகவும் சாதாரணமான விசயம்தான். இப்படிப்பட்ட இயல்பான நிலையில் உள்ளவர்களுக்கு ‘மாரடைப்பு’ வருகிறது என்றால், அது நாமாக இழுத்து வைத்துக் கொள்வதுதான்.
அதுவும் சித்த மருத்துவத்தில் இருதயத்தைப் பாதுகாக்கக்கூடிய நல்ல மருந்துகளும், உடற்பயிற்சிகளும் உள்ளன.
பொதுவாக மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.
  1. பதற்றமில்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
  2. கொழுப்பு, எண்ணெய் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
  3. புகை பிடித்தல் கூடாது.
சரி, இனி சித்த மருத்துவத்திற்கு வருவோம்.
இருதயத்தை பாதிக்கும் வாயுக்களின் செயல்பாட்டை, நாம் உண்ணும் உணவுப் பொருட்களே தீர்மானிக்கின்றன. எளிதில் செரிக்காத பொருட்கள், மாவுப்பண்டங்கள், அதிக புளிப்புச் சுவையுள்ள பொருட்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
மேலும் தன் நிலையில் மாறிய வாயுக்களின் செயல்பாட்டை சரிசெய்ய, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது அவசியம்.
பேதிக்கு கொடுத்தல் என்பது ஒரு நல்ல மருத்துவ வாழ்வியல் முறை. இதனால் அதிகரித்த வாயுக்களின் செயல்பாடுகள் சமநிலை அடையும்.
இதய நோயாளிகள் மட்டுமல்லாமல், நரம்பு மண்டலம் தொடர்புடைய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கும் இது நல்லது.
பிரணாயாமம்:
Irudhayam4பிரணாயாமம் என்பது ஓரு குறிப்பிட்ட முறையில் செய்யப்படும் மூச்சுப்பயிற்சி. இதைத் தொடர்ந்து செய்து வருவதால் இதயத்தின் இரத்தக் குழாய்கள் மற்றும் உடல் முழுவதும் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் விறைப்புத்தன்மை மாறும். இரத்தக் குழாய்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தால்தான் இரத்த ஓட்டம் இயல்பாக இருக்கும். ஆனால் இரத்த குழாய்கள் விறைப்புத் தன்மை அடைவதால் (Atherosclerosis) இருதயத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பிரணாயாமம் தொடர்ந்து செய்து வருவதால் இந்த பாதிப்பிலிருந்து இதயத்தை பாதுகாக்கலாம். பிரணாயாமம் செய்முறைகளை வரும் கட்டுரைகளில் விளக்குகிறேன்.
உடற்பயிற்சிகள்:
இதய நோயாளிகள் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் கீழ்கண்ட யோக ஆசனங்களை செய்து வருவது நல்லது.
Irudhayam3சவாசனம்
தண்டாசனம்
வஜ்ராசனம்
சேது பந்த சர்வாங்காசனம்
புஜங்காசனம்
தனுராசனம்
இவைகளின் செய்முறைகளையும் வரும் கட்டுரைகளில் விளக்குகிறேன். (சுயமாக யோகாசனம் செய்ய முயற்சிக்கக் கூடாது. சித்த மருத்துவர் அல்லது B.N.Y.S படித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று செய்யவும்)
உள் மருந்துகள்:
ஏற்கனவே நான் கூறியதைப் போல, இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளை விட வித்தியாசமானவை. இந்த தசைகளை வலிமைப் படுத்தக்கூடிய தனித்தன்மை வாய்ந்த மருந்துகள் (cardiac Tonics) உள்ளன. அவைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையால் சாப்பிட்டு வருவதால் இதயத்தை வலிமையாக்கலாம்.
மருதம் பட்டை:
Irudhayam1இதை அறிமுகப்படுத்துவதால் உடனே, “மொட்டை மாடியில் இதை வளர்க்கிறேன் பார்…” என்று கிளம்பிவிடக் கூடாது, இது பெரிய மரம். Terminalia Arjuna என்பது இதன் தாவரவியல் பெயர். இதன் பட்டையை அடிப்படையாகக் கொண்ட சூரணங்கள், மாத்திரைகள், அரிஷ்டங்கள் நிறைய உள்ளன. இவை இதயத்தை வலிமைபடுத்தக் கூடியவை.
சிருங்கி பற்பம்:
கலைமானின் கொம்பிலிருந்து செய்யப்படும் ஒரு மருந்து. இது இதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது இதயத்தை பாதுகாக்கும்.
பவள பற்பம்:
இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் பாதுகாக்கக்கூடிய மற்றொரு நல்ல மருந்து இது.
தசமூலா அரிஷ்டம்:
பத்து விதமான மூலிகைகளின் மருத்துவத் தன்மையை உடைய இம்மருந்து இதயத்திற்கும், பொதுவான உடல் நலனுக்கும் ஏற்ற நல்ல மருந்து.
கஸ்தூரி:
பலவீனமான இதயத்தின் செயல்பாட்டை தூண்டிவிடுகின்ற தன்மை இந்த மருந்திற்கு உண்டு. இதனை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள் இதய நோய்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
மேற்கண்ட மருந்துகளை ஒரு சிறிய அறிமுகத்திற்காகத்தான் கூறினேனே தவிர, எந்தவித சுய பரிசோதனையும் செய்ய வேண்டாம்.
பல ஆண்டுகளாக மூச்சிறைப்பு உள்ள வட சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்துமாவிற்கு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். பல ஆண்டுகள் ஆகியும் குணமாகாத நிலையில் என்னிடம் வந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மூச்சிறைப்பிற்கான காரணம் இதய நோய் என கணித்தேன்(Cardiac Asthma).
முற்றிலுமாக மருந்துகளை மாற்றி, இதய நோய்க்கான மருந்து கொடுத்தேன். ஒரு வாரம்தான், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு “உங்கள் வீடு எங்கே இருக்கிறது?” எனக் கேட்டார். “ஏன் வீட்டை கேட்கிறீர்கள்… என்ன விசயம்?” என்றேன். “என்ன சார் இது! பல வருடமாக மருந்து சாப்பிட்டும் கேட்காத ஆஸ்துமா, ஒரு வார மருந்திலேயே பத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது… நான் வாரா வாரம் உங்களுக்கு மீன் கொண்டு வருகிறேன் (இலவசமாக) என்றார்.
மீனெல்லாம் வேண்டாம், சுண்ணாம்பு போடுவதை (வெற்றிலை) நிறுத்திக் கொள்ளுங்கள் அது போதும் என்றேன்.
எதற்காக இதை குறிப்பிடுகிறேன் என்றால் பொதுவான இதய பாதுகாப்புப் பற்றிய கட்டுரைதான் இது. மற்றபடி இருதய நோயில் நோய் கணிப்பு மிகவும் முக்கியம்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா?

siddha1
Dr.Jerome -FI
அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா? அல்லது சித்த மருந்து சாப்பிடும்போது அலோபதி மருந்து சாப்பிடலாமா? என்ற கேள்விகள் பலர் மனதில் இருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லா நோயாளிகளும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடுவார்கள்.
ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு சித்த மருத்துவமே நல்லது என தெரிந்ததும் சித்த மருத்துவம் எடுக்க முடிவெடுப்பர். ஆனால் அவர்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் ஒரு பிரச்சனைக்காக அலோபதி மருத்துவம் சாப்பிட்டுக் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட நிலையில் இதோடு அதையும் சேர்த்து சாப்பிடலாமா என்ற குழப்பம் சிலருக்கு வருகிறது. இருவேறு மருத்துவ முறைகளை ஒரே நேரத்தில் சாப்பிடலாமா? அதனால் எதுவும் பிரச்சனைகள் வருமா என்பது இவர்கள் சந்தேகம்.
அதேபோல என்னிடம் சித்த மருத்துவம் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும் “டாக்டர் இந்த மருந்து சாப்பிடும் போது திடீரென அவசரத்திற்கு அலோபதி மருந்து ஏதேனும் சாப்பிட வேண்டியதிருந்தால் சாப்பிடலாமா?” என கேட்பார்கள்.
-  இது நியாயமான சந்தேகம்தான்.
siddha2ஆனால் இது மிகவும் பொத்தாம் பொதுவான ஒரு கேள்வி. இந்த பொதுவான கேள்விக்குத்தான் இந்த கட்டுரையில் விளக்கம் கூறுகிறேன்.
இதற்கு ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ நேரடியாக பதில் கூறக்கூடாது.
என்ன மருந்தோடு என்ன மருந்தை சேர்த்து சாப்பிடலாமா என கேட்கிறீர்கள் என்பதைத் தெரிந்து, அந்த இரண்டு மருந்துகளின் செயல்பாடுகள் என்ன மற்றும் அந்த இரண்டு மருந்துகளுக்கும் உடல் கொடுக்கும் வினை என்ன என்பவைகளைத் தெரிந்தே பதில் கூற முடியும்.
siddha3எனவே இந்தப் பொதுவான கேள்விக்கு பொதுவான இரண்டு பதில்களைக் கூற விரும்புகிறேன்.
முதல் பதில்:
இரு வேறு மருத்துவ முறைகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வதாலேயே எந்த விபரீத பாதிப்பும் உடலில் வந்து விடாது. மருந்து உடலில் செயல்படும் விதம் என்பது எல்லா மருந்துகளுக்கும் ஒன்றுதான். எனவே இருவேறு மருத்துவ முறைகளை ஒரே நேரத்தில் எடுப்பதாலேயே உடலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற சந்தேகமே தவறானது. இரண்டு மருந்துகளையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாம்.
இரண்டாவது பதில்:
முதல் பதிலில் கூறப்பட்டது ஒரு பொதுவான விளக்கம். ஆனால் இரண்டு மருந்துகளின் செயல்களும் என்ன என்பதை மருத்துவர் தெரிந்து கொண்ட பிறகுதான் அவைகளை சேர்த்து சாப்பிடலாமா என முடிவு செய்ய வேண்டும்.
இரண்டு மருந்துகளுடைய செயல்பாடுகளும் வெவ்வேறாக இருந்தால் சாப்பிடலாம். ஒரே மாதிரியான செயல்பாடுகள் கொண்ட மருந்துகளாக இருந்தால் சாப்பிடக்கூடாது. இதை சித்த மருத்துவரால் மட்டுமே முடிவு செய்ய முடியும்.
siddha4மேலும் எந்த மருந்தாக இருந்தாலும் சரி, மருந்து சாப்பிடுபவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொதுவான விசயம் என்னவென்றால் மருந்தின் செயல்பாட்டை மாற்றக்கூடிய காரணிகள் நிறை உண்டு. (Factors Modifying Drug Action)
அதில் மருந்து சாப்பிடும்போது அதோடு சேர்த்து என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமான ஒன்று. அதைப் பொறுத்தும் மருந்தின் செயல்பாடு மாறுபடும். அது உணவாக இருந்தாலும் சரி. எந்த மருந்தானாலும் அதை சாப்பிட்ட பிறகு, மாவுப்பொருட்கள், பழங்கள், புளிப்பு சுவையுள்ள பொருட்கள், உப்பு சுவையுள்ள பொருட்கள் போன்றவற்றை உண்பதால் மருந்தின் செயல்பாடு மாறுபடும் அல்லது குறையும்.
அப்படி இருக்கும்போது மருந்து சாப்பிட்ட பிறகு, வேறு மருந்துகளையும் அதோடு சேர்த்து சாப்பிடுவதால் நிச்சயம் ஒரு குறைந்த அளவாவது அந்த மருந்துகளின் செயல்பாடுகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. எனவே ஒரு மருந்து சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து இன்னொரு மருந்தை எடுத்துக் கொள்வது பொதுவாக நல்லது.
மிகவும் பொதுவான ஒரு புரிதலுக்காகத்தான் இந்த கட்டுரையே தவிர, எந்த மருந்தை எந்த மருந்தோடு சேர்த்து சாப்பிட போகிறீர்கள் என்பதை முறையாக படித்த சித்த மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதே நல்லது.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
மருந்துகளைப் பற்றி படிக்கும் பாடத்திற்கு ‘மருந்தியல்’ அதாவது Pharmacology என்று பெயர்.
siddha5M.B.B.S படிக்கும் மருத்துவர்கள் அலோபதி மருந்துகளைப் பற்றி மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு சித்த மருந்துகளைப் பற்றிய அடிப்படை அறிவுகூட கிடையாது.
ஆனால் B.S.M.S படிக்கும் சித்த மருத்துவர்கள் சித்த மருந்துகளைப் பற்றி படிப்பதுடன் அவர்களது பட்ட மேற்படிப்பில் (M.D) அலோபதி மருந்துகளைப் பற்றியும் படிக்கிறார்கள்.
எனவே அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா? அல்லது சித்தமருந்து சாப்பிடும்போது அலோபதி மருந்து சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு இரண்டு மருந்துகளையும் பற்றி படித்த ஒரு சித்த மருத்துவராலேயே பதில் கூற முடியும். ஒரு அலோபதி மருத்துவருக்கு இரண்டு மருந்துகளையும் பற்றிய போதிய அறிவு இல்லாததால் அவர்களால் இதற்கு பதிலளிக்க முடியாது.
சித்த மருந்துகளையும் பற்றிய அடிப்படை பாடத்தை (Basic Science) அலோபதி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து வெகுநாளாக உள்ளது. அப்படி சேர்க்கப்பட்டால் அதன் பின் அவர்களுக்கும் இந்த தெளிவு கிடைக்கும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293