இந்தத் தலைப்பில் ஒரு சித்த மருத்துவராகிய நான் ஒரு கட்டுரை எழுதுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆகவே, இதற்கான விளக்கத்தைக் கூறுவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறேன்.
சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் என்றால், எந்த நாட்டு மருத்துவம்;?
ஒரு வேளை சற்று யோசித்துவிட்டு, ‘தமிழ்நாட்டு மருத்துவம்’ என நீங்கள் பதில் அளிக்கலாம்.
இப்போது இன்னொரு கேள்வியையும் நமக்கு நாமே கேட்டுப்பார்ப்போம்.
அலோபதி மருத்துவத்தின் தந்தை என ஹிப்போ கிரேடஸ் அழைக்கப்படுகிறார்.
ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என கிறிஸ்டியன் சாமுவேல் ஹனிமன் என்பவரை அழைக்கிறோம்.
அப்படி சித்த மருத்துவத்தின் தந்தை என யாரை அழைக்கலாம்?
இதற்கு சிலர் அகத்தியர் எனவும், சிலர் போகர் எனவும் கூறிவருகின்றனர். ஆனால் சித்த மருத்துவம் இப்படி ஒரு குறிப்பிட்ட நபரால் தோற்றுவிக்கப்படவில்லை. பல கணங்களாக (group) சித்த மருத்துவ அறிஞர்கள் இயங்கி வந்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு கல்லூரிபோல இயங்கி வந்துள்ளனர். ஒரு மருத்துவ அறிஞரிடம் பலர் மாணவர்களாக இருந்து மருத்துவம் கற்றிருக்கிறார்கள். இந்த மருத்துவ அறிஞர்களிடையே கருத்து பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்படி பல்வேறு சித்த மருத்துவ அறிஞர்களின் புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட மருத்துவத் தொகுப்பே சித்த மருத்துவம்.
இப்படி முப்பதுக்கும் மேற்பட்ட சித்த மருத்துவ மாமேதைகளின் தேடலாலும் ஆராய்ச்சியாலும், எழுத்தினாலும் உருவான ஒரு மருத்துவமுறையே சித்த மருத்துவம்.
ஒரு அறிமுகத்திற்காக அந்த மருத்துவ மேதைகளின் பெயரை குறிப்பிடுகிறேன்.
யூகிமுனி
போகர்
தேரையர்
வால்மீகர்
தன்வந்திரி
ரோமரிஷி
அகத்தியர்
புலிப்பாணி
கொங்கணர்
இடைக்காடர்
கோரக்கர்
பாம்பாட்டி சித்தர்
அழுகண்ணி சித்தர்
காலங்கி நாதர்
பூனைக் கண்ணர்
மச்சமுனி
கருவூரார்
திருமூலர்
சட்டநாதர்
கமலமுனி
இன்னும் சிலர்.
இவர்கள் அனைவரின் பங்களிப்பும் சேர்ந்ததுதான் சித்த மருத்துவம்.
சரி, இவர்கள் அத்தனை பேரும் தங்கள் புத்தகங்களை தமிழ் மொழியில்தான் எழுதினார்கள். அதனால்தான் சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவம் என அழைக்கிறோம். ஆனால், இவர்கள் அத்தனை பேரும் இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்களா?, இவர்களின் மருத்துவ சிந்தனைகள், மருத்துவ ஆராய்ச்சிகள் அனைத்தும் இங்கேயே தோன்றி இங்கேயே வளர்ந்ததா?
இதென்ன புது கேள்வி என நீங்கள் கேட்கலாம்.
இவர்களில் ஒரு சிலரைப் பற்றிக் கூறுகிறேன் பாருங்கள்.
அழுகண்ணி சித்தர்:
இவர் சீனாவைச் சேர்ந்தவர்.
உரோம ரிஷி:
உரோம ரிஷி வைத்தியம் 500, உரோம ரிஷி பதினாறு, உரோமரிஷி முப்பது, உரோமரிஷி ஐம்பத்தி ஒன்று, உரோமரிஷி சுருக்கம், உரோமரிஷி ஊழிக்காற்று, உரோமரிஷி குறுநூல் ஐம்பது என்ற நூல்களை எழுதிய இவர் இத்தாலியைச் சேர்ந்தவர் (ரோம்).
காலங்கி நாதர்:
இவர் சீனாவைச் சேர்ந்தவர்.
சட்டமுனி:
சட்டமுனி நிகண்டு, சட்டமுனி 20, சட்டமுனி தாண்டகம், சட்டமுனி மூலசூத்திரம், சட்டமுனி வாக்கியம் ஆகிய நூல்களை எழுதிய இவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
புண்ணாக்கீசர்:
இவர் கன்னடத்தைச் சேர்ந்தவர்.
புலத்தியர்:
இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
பூனைக்கண்ணர்:
இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்.
போகர்:
மிக முக்கியமான சித்த மருத்துவ மேதை இவர். பாஷாணங்களையும், தாது உப்புகளையும், உலோகங்களையும் எப்படி மருந்தாக்க வேண்டும் என்பதை மிக விரிவாகக் கூறிய ஒரு மருத்துவ அறிஞர் இவர். இவரின் புத்தகங்கள் பல. இவர் சீனாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் சீனாவிற்கு சென்றதற்கான, வந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல மருந்துச் சரக்குகள் வெளிநாட்டில் மட்டுமே கிடைப்பவை. அவை பற்றியெல்லாம் இவரது புத்தகத்தில் விளக்கம் உள்ளது. இவரைப் பற்றி நிறைய கூறலாம். ஒரு வேதியியல் அறிஞராக சித்த மருத்துவத்திற்கு நிறைய செயல் முறைகளைக் கூறியுள்ளார்.
தன்வந்திரி:
தன்வந்திரி தைலம் 500, தன்வந்திரி சிமிட்டு ரத்தின சுருக்கம் 360, தன்வந்திரி நிகண்டு, தன்வந்திரி வைத்திய காவியம், தன்வந்திரி கலைஞானம், தன்வந்திரி நாடி 72, தன்வந்திரி வைத்தியம் 200, இப்படி பல நூல்களை எழுதிய இவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்.
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது?
ஆங்கிலத்தில் Gentle minds think alike என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது மேன்மையானவர்கள் அனைவரும் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள்.
சாமானிய மனிதர்கள்தான் தங்களுக்குள் உயர்வு தாழ்வு (ego) பாராட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அறிவார்ந்தவர்கள் உலகம் எங்கும் சென்று இன்னொரு அறிவாளியிடம் மாணவனாக இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
அதைவிட முக்கியம் தாங்கள் கற்றவற்றை மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில் புத்தகங்களாக தந்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு நாட்டு அறிஞர்களின் படைப்புகளால் உருவானதுதான் சித்த மருத்துவம்.
இப்போது கூறுங்கள் சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் என்றால் எந்த நாட்டு மருத்துவம்?
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
No comments:
Post a Comment